திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.18 திருநின்றியூர்
பண் - நட்டபாடை
(*)சூலம்படை சுண்ணப்பொடி (**)சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.

(*) சூலப்படை என்றும் பாடம்.
(**) சாத்துஞ் சுடநீறு என்றும் பாடம்.
1
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்(*)
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.

(*) நயந்தானா என்றும் பாடம்.
2
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே.
3
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.
4
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கையது (*)ஏந்தியன லாடுங்
கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.

(*) எய்தி என்றும் பாடம்.
5
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே.
6
பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்
பெற்றியது வாகித்திரி தேவர்பெது மானார்
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
நல்லமலர் மேலானொடு ஞானம்மது வுண்டான்
அல்லரென ஆனரென நின்றும்மறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.
9
நெறியில்வரு பேராவகை நிiனாயநினை வொன்றை
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.
10
குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com